Thursday, June 11, 2009

அன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே!

அன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் - தயா மோகன்
 
[ வியாழக்கிழமை, 11 யூன் 2009, 09:45.53 PM GMT +05:30 ]
 
மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன்.
இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும் அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால் இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள் நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும்.

உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால் அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும் விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால் நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும் எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…
தயா மோகன்
விடுதலைப்புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பொறுக்கிக் கும்பல்

ஈழத்தமிழினம் இன்று மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியான பின்னடைவை சந்தித்திருக்கின்றது. கைதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் எஞ்சிய ஈழத்தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் சிங்கள இனவெறிக் கும்பலுடனும், இந்திய ஆரிய இனவெறிக் கும்பலுடனும் கள்ள உறவு கொண்ட அரசியல் அயோக்கியர்கள் நாங்களே என்று பறைசாற்றியிருக்கிறது பு.ஜ. - ம.க.இ.க. கும்பல். தமிழீழ தேசியத் தலைவரை பாசிஸ்ட் என்றும் விடுதலைப்புலிகளை பாசிச இயக்கமென்றும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகள் போல முழங்கி வந்த இவர்கள், திடீரென ”புலிகளுக்கு வீரவணக்கம்” என்று காவடி எடுத்துள்ளார்கள். ”நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களுக்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்?” என்று விசாரித்தால் ”இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..” என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பார்ப்பனர்கள் - இந்தியத் தேசிய வெறியர்களுக்கு நிகராக தமிழ்நாட்டில், தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.

என்ன தான் இவர்களது அரசியல்? இவர்கள் உண்மையில் யார்? ஈழப்பிரச்சினையில் இவர்களது நிலைபாடு என்ன? இவர்கள் உண்மையிலேயே ”புரட்சி”யாளர்களா? இவர்களது அரசியல் உள்நோக்கம் தான் என்ன? இவர்களை இயக்குகின்ற சக்தி எது?

யார் இந்த ம.கஇ.க. ?

“மக்கள் கலை இலக்கியக் கழகம்”(ம.க.இ.க.) என்கிற அமைப்பை சார்ந்தவர்கள் தான் இவர்கள். “புதிய ஜனநாயகம்“, “புதியக் கலாச்சாரம்“ என்ற இரு மாத இதழ்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களை இவர்களே புரட்சிகர அமைப்புகள் என்று அட்டைப் படத்தில் போட்டு விற்பனை செய்வார்கள்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு.(அப்பாடா..!) என இவர்களது அமைப்புப் பெயரை இப்படித்தான் இவர்கள் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஏகலைவன், ட்ராட்ஸ்கி, என பல பெயர்களில் பதிவுகள் எழுதி ம.க.இ.க.வின் கருத்துகளை வெவ்வேறு பெயர்களில் எழுதி இணையதளங்களில் மட்டுமே ”புரட்சி”யாளர்கள் போல் நடிக்கும் கைத்தேர்ந்த ஆள்பிடிக்கும் கும்பல் இவர்கள். ஆயுதப்புரட்சி பற்றி இவர்கள் பேசாத பேச்சில்லை. ஆனால், இதுவரை அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியதில்லை. ”இந்திய முழுமைக்கும் புரட்சி நடத்த வேண்டும்” என்று கூச்சல் போடுவார்கள் ஆனால் தமிழக எல்லையைத் தாண்டினால் இவர்களை சீண்ட ஆளில்லை. இவர்கள் வசைமாறிப் பொழிந்து அவதூறு பேசாத தலைவர்கள் உலகத்திலே யாருமே இல்லை எனலாம்...

பி.இரயாகரன் என்ற புலம் பெயர்ந்த ”கீபோர்டு” ”புரட்சி”யாளரின், சிங்களத்தின் பாதம் நக்கிக் கொண்டு, புலிகளுக்கு எதிராக அனல் கக்கும் ”தமிழ் அரங்கம்“ இணையதளத்தில் ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் அதிகமாக பிரசுரிக்கப்படும். ”வினவு” என்ற ம.க.இ.க.வின் சொந்த இணையதளம் ஒன்றும் உள்ளது. நாளடைவில் சிங்கள இராணுவத்தின் இணையளங்களில் கூட ம.க.இ.க.வின் கட்டுரைகள் பதிவு செய்யப்படலாம். ஏனெனில், அந்தளவிற்கு தான் இவர்களது கருத்தும் செயல்பாடும் இருக்கிறது. ”துக்ளக்” சோ, ”தினமலர்”, சிங்கள இரத்னா ”இந்து” என்.ராம் ஆகியோருக்குப் பிறகு விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் இவர்களையும் இனி நாம் பட்டியலிட்டாக வேண்டும். ஏனெனில், இவர்கள் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதை இவர்களே நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

சற்று விரிவாகவே பார்ப்போம் இவர்களது ”சாகசங்களை”....

இட ஒதுக்கீடு - பார்ப்பனர்களுடன் கைக்கோக்கும் ”ராஜதந்திரம்”

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற மூன்றாவது நிலையை ”ராஜதந்திரமாக” ம.க.இ.க. எடுத்து, தான் யாரென அம்பலப்பட்டது. இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்கும் பார்ப்பனர்களுடன் முற்போக்கு வேடங்கட்டிக் கொண்டு கைக்கோர்த்தல் நெருடலாக இருந்ததால், மறைமுகமாக இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் எல்லை என்று புருடா விட்டார்கள். இவர்களை அம்பலப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஐயா. மணியரசன் ”ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்” என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ”தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான்.

இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் பார்ப்பனியக் கும்பல்

இந்தியா என்கிற ஆரிய இனவெறி பார்ப்பனியப் புனைவுக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் படுபிற்போக்கு அதிமேதாவிகள் தான் இவர்கள். ஆனால், இந்தியாவை பற்றி வாய்கிழிய பேசுவார்கள். பேசி முடித்ததும், ”இந்தியா நமது நாடு” என்று நம்மையே நச்சரித்து நக்கித் திரியும் பிரணிகளாக மாறிப்போவர்கள். தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்பதை பரிசீலிக்காத அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசியல் ”நடிகர்கள்”. இவர்களது இலக்கு என்னவென்று கேட்டால் ”புதிய ஜனநாயகப் புரட்சி” என்பார்கள். ”ஒ.. அப்படினா என்னங்க..” என்று யாராவது கேட்டால், ”இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இந்தியாவை கைப்பற்றுவது” என்பார்கள்.

இந்தியா முழுமைக்கும் புரட்சி என்று வாய்ச்சவடால் பேசும் இந்த நாதாரிகளுக்கு தமிழ்நாட்டு எல்லையை தாண்டினால் இவர்களுக்கு கட்சியோ, அமைப்போ கிடையாது. ஆனால், ஏதோ இந்தியா முழுமைக்கும் இவர்களுக்கு அமைப்பு உள்ளது என்பது போல நன்றாக வேடம் கட்டுவார்கள். இந்தியா என்பது பல்தேசிய இன நாடு என்பதால் அந்தந்த இனத்து மக்கள், அவரவர் வழியில் தனித்தனியே தான் புரட்சியில் ஈடுபட இயலும் என்ற மார்க்சியப் பார்வை சிறிதம் இல்லாத போலி மார்க்சிஸ்டுகளின் திருட்டுக் குழுந்தையே ம.க.இ.க. கும்பல் எனலாம். மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக பாவிக்கும் இவர்களை போன்றவர்களால் மார்க்சியத்தின் மீதான அவதூறுகள் அவ்வப்போது வலுவடைவது இவர்களது மார்க்சிய சேவையை உணர்த்தும்.

ஈழம்: சோ, இந்து ராம், சு.சாமி, செயலலிதா அணிவரிசையில் ம.க.இ.க.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க சிங்கள இனவெறி அரசு என்ன உத்திகளையெல்லாம் கையாண்டதோ அதே உத்திகளை கையாளும் இயக்கம் தான், ம.க.இ.க.வாகும். விடுதலைப்புலிகளை ”பாசிஸ்ட்”கள் என்பது முதல் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை இழிவு படுத்துவது வரை சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு உதவிய ம.க.இ.க.விற்கு சிங்கள அரசு பாராட்டு விழா நடத்தினாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஈழத்தமிழர்களின் எதிரிகளான பார்ப்பனிய ஜெயலலிதா, இந்து ராம், சு.சாமி, துக்ளக் சோ உள்ளிட்டவர்களின் அறிக்கைக்கும் ம.க.இ.க.வின் நிலைப்பாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று ம.க.இ.க.வில் உள்ள அப்பாவித் தோழர்கள் என்றாவது யோசித்ததுண்டா..?

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?

ஈழத்தமிழர்களுக்கு உயிர் நீத்த மாவீரன் முத்துக்குமார் ஊர்வலத்தில் தமிழ் உணர்வுடன் எல்லோரும் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கூடி நிற்க, அங்கு ”பேனர்” பிடித்து ஆள்பிடித்த ஒரு கும்பல் இவர்கள் தான். தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் ”பிழைப்புவாதிகள்” என்று முத்திரைக்குத்தும் இந்த குள்ளநரிகள், புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ”பிழைப்புவாதிகள்” நடத்தும் கூட்டங்களுக்குத் தான் வெட்கமின்றி செல்வார்கள். அக்கூட்டங்களுக்கு சென்று தமிழின உணர்வுடன் கூடியுள்ள தோழர்களிடம் ”வர்க்கப் பிரச்சினையே ஈழப்பிரச்சினைக்கு காரணம்” என்று மூளைச் சலவை செய்வது தான் இவர்களது ஒரே களப்பணி.

தனக்கென ஒரு தேசம் இல்லாத பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்த இயலாது என்பது தான் மார்க்சியம். தமிழினம் தனக்கென ஒரு தேசம் இல்லாத இனம். ஆக, தமிழ்நாட்டு தமிழன் எப்படி வர்க்கப் போராட்டம் நடத்த இயலும் என்று ம.க.இ.க.வின் தலைமையிடம் கேள்வி கேட்க, மார்க்சியம் தெரிந்த ஆட்கள் இல்லை என்பதால் தான் அவர்கள் இன்னும் அமைப்பாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை வாந்தி எடுப்பதும், காப்பி அடிப்பதும் தான் மார்சிஸ்டுகளின் வேலை என்று செயல்படும் இது போன்ற போலி மார்க்சிய திரிபுவாதிகளால் மார்க்சியத் தத்துவத்திற்கு அவமானமே மிஞ்சுகின்றது.

தமிழ்த் தேசிய எழுச்சியை கண்டு நடுங்கும் ம.க.இ.க.

ஈழத்தமிழினம் இவ்வளவு பெரிய அழிவை சந்திப்பதற்கு காரணமான சிங்கள - இந்திய அரசின் இனவெறியைப் பற்றி பேச வக்கில்லாத இந்த பொறுக்கிகள், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கழிசடைக் கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ”பாசிஸ்ட்” அல்லது ”தமிழின பிழைப்புவாதி” ஆகிவிடுவோம்.

ஈழப்போராட்டம் பற்றி தொடர்ந்து இழிவுபடுத்துவதும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விடுதலை இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும் என இவர்களது அரசியல் பாதை இன்று வரை தொடர்கிறது. இவர்களைப் பொறுத்தவரை ”தமிழன்” என்று இவர்களை தவிர வேறு யார் சொன்னாலும் ”தமிழின பிழைப்புவாதிகள்”.. ஆனால் இவர்கள் ”தமிழர்களே சிந்தியுங்கள்” என்று துண்டறிக்கை அடிப்பார்கள். சுவரொட்டி ஒட்டுவார்கள். ஆனால் இவர்களை நம்பி தமிழின உணர்வுடன் இவர்களை அணுகினால் மாவோ முதல் மார்க்ஸ் வரை பேசிவிட்டு, ”தமிழ் உணர்வு என்பதெல்லாம் இனவெறி” என்று கூறுவார்கள்.

”தமிழ்த் தேசியர்கள்” யார்?

வாய்க்கு வந்தபடி வாந்தி எடுப்பதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கும்பல், அண்மையில் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை என்ற பெயரில் ஒரு குறுநூலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்த் தேசியர்கள் என்று இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. கூறவுமில்லை. ஆனால் விமர்சனம் மட்டும் செய்கின்றார்கள். அறிவு நாணயமோ, மார்க்சியத் தெளிவோ, இல்லாத இவர்கள் விவாதத்திற்குத் தான் அழைக்கிறர்கள் என்று யாரும் ஏமாந்து விட வேண்டாம். வழக்கம் போல எல்லோரையும் கண்டபடி திட்டிவிட்டு கடைசியில் நாங்கள் தான் உண்மையான ”புரட்சி”யாளர்கள் என்று தனக்குத் தானே துதிபாடல் பாடிக் கொண்டார்கள்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தான் தமிழ்த் தேசிய அமைப்பா?

தேர்தல் கட்சிகளான பா.ம.க., ம.தி.மு.க., வி.சி., இ.கம்ய., மா.கம்யு., உள்ளிட்ட கட்சிகள் ”இலங்கை”த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கினர். இக்கூட்டமைப்பு வெறும் பதவிக்காக ஈழத்தமிழர்களை பேசும் அமைப்பு என்பதும், இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ”தமிழ்த் தேசியவாதி” என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.

அவற்றுள், பா.ம.க., வி.சி., ம.திமு.க. போன்ற கட்சிகள் நேரடியாக புலிகளை ஆதரித்து வருவதால் மட்டும் இவர்கள் பேசுவது “தமிழ்த் தேசியம்“ ஆகிவிடாது. இந்தியத் தேசியம் என்ற பார்ப்பனிய புனைவுக்குள் நின்று கொண்டு ஈழவிடுதலையை மட்டுமே முன்னிறுத்தும் போலித்தனமான தமிழ்த் தேசிய வாதத்தை தேர்தலுக்காக மட்டுமே இவர்கள் முன்னிறுத்தகின்றனர். இவர்களது நோக்கம் பதவியைத் தவிர வேறல்ல என்பதும் இவர்கள் பேசுவது போலித்தனம் என்பதும் இவர்களை உண்மையான ”தமிழ்த் தேசியவாதிகள்” என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான் என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.

அதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ”தமிழ்த் தேசியம்” என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும். காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ”தமிழ்த் தேசியத்“தை ஏற்கிறார் எனலாம்.

இவர்கள் இருவரும் நேரடியாக தேர்தலில் பங்கேற்கவில்லை என்றாலும் அவ்வப்போது தோ்தல் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலைபாட்டை எடுப்பது வழக்கமாகும். இவர்கள் பேசும் ”தமிழ்த்தேசிய”த்திற்கான போராட்டங்களும் செயல் திட்டங்களும் இன்றுவரை வகுக்கப்படாமல் வெறும் கருத்தியல் வடிவம் மட்டுமே உள்ளது என்பதால் இதனை யாரும் கருத்தில் கொள்வது கிடையாது.

மேற்கண்ட உண்மைகளை ம.க.இ.க.வை போல் அரைவேக்காட்டுத் தனமாக பார்க்காமல், நன்கு அவதானிப்பவர்களால் கூட எளிதாக உணர்ந்திட முடியும். இருந்தாலும், ம.க.இ.க.விற்கு இவர்கள் பேசுவது தான் ”தமிழ்த் தேசியம்” என்று குட்டைக் குழப்பம் வேளையில் ஈடுபடுவார்கள்.

அந்நூலில், ம.க.இ.க. நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியர்களும் உண்டு.

தமிழர் ஒருங்கிணைப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ”தமிழர் ஒருங்கிணைப்பு” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும். இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக இக்கூட்டமைப்புச் செயல்பட்டு வருகின்றது.

பெரியார் தி.க.

தமிழ்த் தேசியத்தின் தந்தையாக விளங்கும் ஈ.வெ.ரா.பெரியார் தனது உயிர் மூச்சு போகும் வரை இந்தியத் தேசியத்தை துளியும் ஏற்காமல், ”தமிழ்நாடு தமிழருக்கே” என்று சமரசமின்றி முழங்கி வந்தாலும் கூட, இந்தியத் தேசிய அரசுக் கட்டமைபில் நடைபெற்று வந்த தேர்தலை அவர் ஏற்றுக் கொண்டார். அவர்கள் வழிவந்த பெரியார் தி.க. அமைப்பு தற்பொழுதும், தனித்தமிழ் நாட்டை தனது கொள்கையாகக் கொண்டிருந்தும் கூட இன்றளவும் தோ்தலில் நம்பிக்கை வைத்துள்ள அமைப்பாகும். தேர்தலில் நேரடியாக பங்கேற்கவில்லை என்ற போதும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைபாட்டை இவர்கள் எடுப்பது வழக்கம். நடந்து முடிந்தத் தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செயலலிதாவை ஆதரித்தனர்.

”செத்து விழும் சவங்களில் ஒன்றிரண்டாவது குறையட்டும். அதற்காக தற்காலிகமாக யாருடனும் சேருவது தவறல்ல” என்ற மனித நேயச் சிந்தனையுடன் பெரியார் தி.க. செயலலிதாவை ஆதரித்தது தெரிந்தும் கூட, ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் - தி.மு.க கைக்கூலிகளிடம் ஆதாயம் பெற்ற பேட்டை ரவுடி போலவே பெரியார் தி.க.வின் இந்நிலைபாட்டை தீவிரமாக எதிர்த்தது. ம.க.இ.க.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தமிழ்த் தேசப் பொது உடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இருகட்சிகளும் பார்ப்பனியப் புனைவான இந்தியத் தேசியத்தின் கட்டமைப்பிற்குள் நடத்தப்படும் தேர்தல்களை ஏற்பதற்கில்லை என தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பை நடத்தும் இயக்கங்களாகும். நேரடியாக ஒரு தேர்தல் கட்சியை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ளாத இவ்விரு கட்சிகளும் பெரியார் தி.க.வுடன் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்காமல் ”வாக்களிக்க விரும்பும் தமிழர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்று மட்டும் பரப்புரை செய்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாமல் இருந்தாலும், இந்திய வருமானவரித் துறை முற்றுகை, தஞ்சை இந்திய விமானப்படைத் தளம் முற்றுகை என போராட்டக் களத்தில் இந்தியத் தேசிய அரசை மட்டுமே எதிரியாக்கி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி செயல்பட்டு வந்தது.

உண்மையான ”தமிழ்த் தேசியம்” எது?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கூறும் ”தமிழ்த் தேசியம்” என்பது, எந்தவொரு சமரசமும் இன்றி தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, முழுமையான இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற தனித்தமிழ்நாட்டை கட்டியெழுப்புவது தான். இவ்விருக்கட்சிகள் கூறும் ”தமிழ்த் தேசியம்” என்ற கருத்தியலை பெரியார் தி.க. விமர்சனத்திற்கு அவ்வப்போது உட்படுத்திய போதும், ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு விமர்சனங்களை மறந்து கூட்டமைப்பாக தற்பொழுது இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

பெரியார் தி.க. தவிர, மற்று இவ்விருக் கட்சிகளும் விடுதலைப்புலிகளின் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனரே தவிர, இந்தியாவை ஆதரிக்கும் விடுதலைப்புலிகளின் வெளியுறவுக் கொள்கையை இவர்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.

ம.க.இ.க. எழுதியிருக்கும் அக்குறுநூலில் இவர்களில் யாரைக் ”தமிழ்த் தேசியர்கள்” என்று குறிப்பிடுகின்றது?
”இந்தியாவிற்கு அடியாள் வேலை செய்வோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர். ஒருவேளை, இந்தியா இதனை ஏற்குமானால், தமிழகத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவே புலிகள் திரும்புவார்கள். எனவே தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை கைவிட்டு விடுவீர்களா?” என்று பொருளில் அந்நூலின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது ம.க.இ.க.

தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை வலியுறுத்திப் போராடி வரும் அமைப்புகள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளை மட்டுமே. இக்கேள்வியின்படி, ம.க.இ.க. குறிப்பிடுவது போல பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ”தமிழ்த் தேசியர்கள்” வரையறைக்குள் வரமுடியாது எனில், இவ்விருக்கட்சிகளை மட்டும் தான் ”தமிழ்த் தேசியர்கள்” என்று பொத்தாம் பொதுவில் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா என்று தோன்றுகிறது.

இவர்களை நோக்கித் தான் இக்கேள்வி என்றால், இவ்வமைப்புகள் புலிகளின் வெளியுறவுக் கோரிக்கையை ஏற்கவில்லை என்றே நிலைப்பாடு கொண்டுள்ளவை என்பது ம.கஇ.க.விற்கு தெரியாதா? என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ”இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்” என்று எழுதியிருக்கிறார்களா? பேசியிருக்கிறார்களா? எங்காவது இதற்கான ஆதரத்தை பு.ஜ. பொறுக்கிக் கும்பல் காட்ட இயலுமா? இயலாது.

பழ.நெடுமாறன் அவர்கள், தமிழ்த் தேசியர்களின் அடையாளமாக ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டாலும், அவர் கூறும் ”தமிழ்த் தேசியம்” என்பது என்னவென்று ம.க.இ.க.வினருக்கு நன்கு தெரியும். ஈழவிடுதலைக்கு முதன்மை கொடுத்து செயல்படும் பழ.நெடுமாறன் அவர்களது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக ”தமிழ்த் தேசியர்கள்” என்று பொத்தாம் பொதுவில் குறிப்பிட்டு அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் வக்கிர வன்மத்துடனும் எழுப்பப்பட்டுள்ள கேள்வி இது என்பது தெளிவாகின்றது.

வெறும் பொருளாதார சிக்கலே இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டிற்கான காரணம் என்று முழங்கிவருகின்றது ம.க.இ.க.

இந்திய முதலாளிகள் இலங்கை என்ற ஒரேச் சந்தையில் கொள்ளையடிக்க விரும்புகிறார்களாம். இந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்திய அரசு, அதனை ஆளும் முதலாளிகளின் நலனுக்காக சிங்களத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு ஈழத்தமிழாகளுக்கு எதிராக செயல்படுகின்றது என்று கூறுகிறது ம.க.இ.க. மேலும், இந்தியா தனது மேலாதிக்க வெறி காரணமாக தமிழர்களை அழித்தொழிக்க உதவுகின்றது என்றும் ம.க.இ.க. கூறுகின்றது. ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இந்தியாவிற்கு இவை இரண்டு மட்டும் தான் முக்கிய காரணங்களாம்.

இந்திய அரசு ஆரியப் பார்ப்பனிய அரசு. இந்தியத் தேசியம் என்பது ஆரியர்களின் தேசியம். பார்ப்பனியம் கட்டியெழுப்பியக் கோட்டை இந்தியத் தேசியம். இந்தியத் தேசியத்தை ஆதரிப்பது என்பது நேரடியாக பார்ப்பனியத்தை ஆதரிப்பதற்குச் சமம். ஆரியர்களுக்கு தமிழர்கள் மீதும் தமிழினம் மீதும் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வரும் பகை, அதன் அரசாங்க வடிவமான இந்தியத் தேசியம் மூலம் வெளிப்படுகின்றது. அதனால் தான் இந்திய அரசு தமிழர்களுக்கு என்றுமே எதிராக உள்ளது.

தமிழகத்தின் உரிமைப் பிரச்சினைகளான காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, பாலாறு பிரச்சினை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்திய அரசு, தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிற்கு ஆதரவாக என்றுமே செயல்பட்டது இல்லை. மாறாக, மலையாளி, கன்னடர் உள்ளிட்ட அயல் தேசிய இனங்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருந்து வருவது கண்கூடு. மேலும், தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சிங்கள வெறிநாய்களால் சுட்டுக் கொல்லப்படும் பொழுதெல்லாம், அதனை கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியில் திளைத்த இந்திய அரசை, தமிழக மீனவர்கள் செத்தால் நிம்மதி என்று திரியும் இந்திய அரசை, ஆரிய இனவெறி அரசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிட முடியும்?

பார்ப்பனிய இந்திய அரசு பல்வேறு வடிவங்களில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற போதும், இந்த சிறு அரசியலை கூட புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கும் ம.க.இ.க.விற்கு இதனை அம்பலப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தான் என்ன?

தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், ஈழத்தில் இருந்தாலும் ஆரியர்களுக்கு எதிரிகளே. இந்திய அரசு இந்த ஒரே அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஒடுக்கவும், அழிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய அரசின் இந்த ஆரிய இனவெறிப் போக்கைக் கண்டிக்க வக்கில்லாத ம.க.இ.க. கூலிக்கும்பல், இந்திய அரசின் இந்த இனவெறிப் போக்கை மறைப்பதன் மூலம், தாங்களும் அந்த ஆரியக் கும்பலின் அங்கத்தினரே என்று பறைசாற்றுகின்றது.

”இந்திய அரசின் மேலாதிக்க நோக்கமே காரணம்” என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுக்கும் ம.க.இ.க. கும்பல், சிங்களக் கூலிகள் தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுவதால் இந்திய முதலாளிகளுக்கு ஏற்படும் ”லாபம்” பற்றி விளக்கத் துப்பிருக்கிறதா? தமிழ்நாட்டு தமிழனைக் கொல்லப்படுகின்றனரே, அதற்கும் இந்திய அரசின் ”மேலாதிக்கவெறி” தானா காரணம் என்று விளக்குமா?

தனித் தமிழீழமே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கம் வெளியிட்ட தமது நூலின் தலைப்பே ”சோசலிசத் தமிழீழம்” என்பதாகும். தொடக்கத்தில் புலிகளுக்கு மார்க்சியத்தின் மேல் இருந்த ஈர்ப்பு, காலப் போக்கில் மாறியது எனலாம். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் நல்லுறவு பேணினால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு அது உதவியாக இருக்கும் என்ற கருத்தியல் ஈழத்தமிழர்களுக்கு இருந்தது. தமிழீழத்தின் அங்கீகாரத்திற்கு இது உதவும் என்றும் நம்பப்பட்டது.

ம.க.இ.க. குரைப்பதைப் போல, இவ்வாறு ஏகாதிபத்தியத்துடனும், முதலாளிகளுடனும் சமரசம் செய்து கொண்ட ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க இந்திய முதலாளிவர்க்கம் ஏன் ஆசைப்பட வேண்டும..? இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து ஈழத்தை உருவாக்கினால், அது இந்திய முதலாளிகளுக்குத் தானே ”லாபம்” ?! இவை தெரிந்தும் கூட இவ்விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிங்கள அரசுக்கு அளப்பரிய ஆதரவை இந்திய அரசு நல்கியது ஏன்..?

முதலாளிகளுக்கு இலங்கை பிளவுண்டாலும் லாபம். ஒன்றுபட்ட இலங்கையும் லாபம் தான். முதலாளிகளின் லாபவெறி ஒரு சந்தையை உருவாக்கும் அல்லது தேடும் மாறாக, ஒரு சந்தையை (தமிழர்கள்) முற்றிலும் அழித்தொழிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியெனில், இந்திய முதலாளிகள் ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டியதன் காரணம், அவசியம் என்ன..? ம.கஇ.க. ”தத்துவ” புருடர்கள் விளக்குவார்களா..?

இது போன்ற பல்வேறு கேள்விகளைக் இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள அப்பாவி இளைஞர்கள் கேட்கும் நிலை வந்தால் என்ன செய்வது என்று, ம.க.இ.க.வின் தலைமைக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்நேரம் இவற்றுக்கொரு பதிலையும் அவர்கள் தயார் செய்திருக்கக் கூடும். ஏனெனில், ம.க.இ.க.வினர் இக்கேள்விகளை எதிர்பார்க்காமல் தங்கள் செயல் திட்டங்களை செய்வதில்லை.

எப்பொழுதும் இல்லாத வகையில், மிகவும் அம்பலப்பட்டு நிற்கும் ம.க.இ.கவை இயக்குகின்ற சக்தி எது என்று பலத்த சந்தேகங்கள் இன்றைக்கு எழும்பியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழின உணர்வு மேலொங்கியுள்ள நிலையில், அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்திய அரசின் உளவுப்பிரிவினருக்கும் தமிழக ஆளும் வர்க்கத்திற்கும் ம.க.இ.க.விற்கும் மறைமுக மற்றும் நேரடி தொடர்புகளே இருக்கலாம். உணர்வுடன் எழுகின்ற தமிழ் இளைஞர்களை, வாய் கிழிய பேசியும், எழுதியும் மயக்கி ”நாங்கள் தான் புரட்சியாளர்கள்” மற்றவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று அவதூறு பரப்பி ம.க.இ.க.வில் சேர்க்கிறார்கள். உண்மையான புரட்சிகர சக்திகளிடம் தமிழக இளைஞர்கள் சேருவதை விரும்பாத ஆளும் வர்க்கத்தின் உளவுத்துறையே ம.க.இ.க. போன்ற ”வாய்ச்சவடால்” ”புரட்சி”க் குழுக்களை உருவாக்கிவிட்டிருக்கலாம்.

தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...!

இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும், மனிதாபிமானக் குரல்கள் உரத்து ஒலிக்கட்டும் - விடுதலைப் புலிகள்


தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது.
இச் சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு அறிக்கை:
தமிழீழ மக்களாகிய நாம் இலங்கைத் தீவில் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கொண்ட ஒரு தனித்துவமான தேசிய இனம்.
இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கில் எமது பாரம்பரியத் தாயகத்தின் இறைமை பொருந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது அரசியல் இலக்கை நோக்கி ஒப்பற்ற அர்ப்பணிப்புக்களுடன் போராடி வருகின்ற மக்கள் நாம்.
எமது உரிமைப் போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அமைதிமுறையில், ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட்டதில் நாம் கண்ட பட்டறிவு சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு எமது அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை வென்றெடுப்பதற்கு சிங்களப் பேரினவாதம் இலகுவில் முன்வரப்போவதில்லை என்பதே. இந்தப் பட்டறிவின் விளைவே தந்தை செல்வா அவர்களை இறைமையுள்ள தமிழீழமே எமது அரசியல் விடுதலைக்கான ஒரே வழி என்று தீர்மானிக்கவைத்தது. இதற்கான ஜனநாயக ரீதியிலான மக்கள் ஆணையை நிலைநாட்டியவரும் அவரே.
இதைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக நடைபெற்றுவந்துள்ள தேசிய விடுதலைக்கான ஆயுதப் போரில் இந்த மக்கள் ஆணையை எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தேசியத்தலைவருமான மேதகு வே. பிரபாகரன் அவர்கள் முழுமூச்சாக முன்னெடுத்து தமிழீழ அரசை எமது கண்முன்னே நிறுவி, அதன் விடுதலைக்கான போராட்டத்தை ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கூடாக வலுப்படுத்தி, தமிழீழ மக்களின் ஆணையை சர்வதேசமயப்படுத்தியுள்ளார்.
தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும்.
எமது தாயக மண் எதிரியின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில் தமிழீழத் தேசியத்தைப் பிரதிபலித்து அதன் இறைமைக்கும் சுதந்திரத்துக்குமான அரசியல் இலக்கை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாகப் பெரும்பங்காற்றவேண்டிய நிலையில் உலகத் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது வரலாற்றுக் கடமையின் பொறுப்பை உணர்ந்தவர்களாகச் செயலாற்றவேண்டும்.
தாயகத்தில் சொல்லொணாத் துயருறும் எமது உடன்பிறப்புக்களின் துயர்துடைக்கும் மனிதாபிமானக் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதற்கும், உலக மனிதாபிமானத்தின் கண்களை எமது மக்களின் இன்னல்களை நோக்கித் திருப்புவதற்கும் முழுமூச்சாக காலதாமதமின்றி உழைக்கவேண்டிய உடனடிக்கடமை எம்முன்னால் உள்ளது.
மனிதாபிமானக் கட்டமைப்புக்களையும், பரப்புரை வேலைகளையும் உரிய முறையில் நெறிப்படுத்தும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்தப்படவேண்டிய காலம் இது.
இந்த வரலாற்றுத் திருப்புமுனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்பினூடான ஜனநாயகக் கட்டமைப்புக்களைப் பரிணமிக்கச்செய்யும் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் கிளைகள் இயங்கும் நாடுகளில் துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தத் தயாராகிவருகின்றது.
போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது என்ற சிந்தனைக்கமைய, தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டம் புலம்பெயர் மக்களின் அரசியற் பங்களிப்பினூடாகக் கூர்ப்படைந்துசெல்லவேண்டிய வரலாற்றுத் தேவையை உணர்ந்தவர்களாக, இதயசுத்தியுடன் ஒருமித்த மக்கள் பங்களிப்போடு சங்கமித்து நாம் அனைவரும் ஒன்றிணைந்த ஓர் அனைத்துலகச் சக்தியாய் முன்னெழுவோம்.
இதற்கு முன்னோடியாக, அந்தந்த நாட்டிற்கேயுரிய அரசியற் சிறப்பியல்புகளுக்கு ஏற்ற வகையில் மக்கள் பங்களிப்பை உறுதிசெய்கின்ற நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பைப் பரிணமிக்கச் செய்யும் பணியை மேற்கொள்ளுவதற்கும் மக்கள் ஆணையை உறுதிசெய்வதற்குமான வேலைத்திட்டங்களை அந்தந்த நாட்டுக்கிளைகள் முன்னெடுக்கும்.
இந்த ஒழுங்குகளுக்கு தேசியப்பற்றுக்கொண்ட அனைவரையும் பாகுபாடின்றி இதய சுத்தியோடு பங்குகொண்டு ஊக்குவிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் இத் தருணத்தில் வேண்டிநிற்கிறது.
இந்த வேலைத் திட்டங்களுக்கான கருத்துப் பரிமாறல்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் கிளைப் பொறுப்பாளர்களை அணுகுமாறு வேண்டுகிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இவ்வண்ணம்,
பொ.செம்மலை
தாயக ஒருங்கிணைப்பாளர்
அனைத்துலகத் தொடர்பகம்

அதிரடியான் - கொள்கை விளக்கம்

உலகின் மூத்த இனம் நமது தமிழினம்...

உலகின் மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள்...

இன்றைக்கு நம்மினத்தின் நிலைமை என்ன?
நாடற்ற இனமாக
நாதியற்ற இனமாக
உலகெங்கும் அடிவாங்கும் இனமாக
உள்ள நமது இனத்தின் இன்றைய நிலைக்கு
யார் காரணம்?
ஈழத்தமிழர்களின் தாகமான ”தமிழீழம்”...
தமிழகத் தமிழர்களின் ”தமிழ்த் தேசக் குடியரசு”...
... இதுவே எமது இறுதி லட்சியம் ...
உலகத் தமிழர்களே ஒன்று சேருங்கள்...!

அதிரடியானின் அட்டகாசம் இனி ஆரம்பம்....!



ஈழத்தமிழினம் செத்து மடிந்து கொண்டுள்ளது..
அம்மக்களின் விடுதலைப் போருக்கு எதிரான சக்திகளை அடையாளம் காட்டி அவர்களை அம்பலப்படுத்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த வலைப்பதிவு உருவாக்கப்படுகின்றது...

நன்றி!

... அதிரடியான் ...